இந்திய அளவில் கல்வி அறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் கேரள மாநிலம் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிடும். அதன்படி, நடப்பு ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், கேரள மாநிலத்தில் 96.2 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்று முதலிடத்தில் உள்ளனர். ஆந்திர மாநிலம் 66.4 சதவிகித புள்ளியில் கடைசி இடத்தில் உள்ளது.
இது தொடர்பாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டிலேயே அதிகமான கல்வியறிவு பெற்றவர்கள் உள்ள மாநிலமாகக் கேரளா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கேரளாவின் கிராமப்புறங்களில் மட்டும் 95.4 சதவிகிதம் பேரும், நகர்ப்புறங்களில் 96.4 சதவிகிதம் பேரும் என ஒட்டுமொத்தமாக 96.2 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
கேரளாவைத் தொடர்ந்து, தில்லி இரண்டாம் இடத்திலும், உத்தரகண்ட் மாநிலம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இமாச்சலப்பிரதேசம் நான்காம் இடம், அசாம் 5-வது இடம், மகாராஷ்டிரா 6-வது இடம், பஞ்சாப் 7ம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த புள்ளிவிபரப் பட்டியலில் தமிழ்நாடு 8-வது இடத்தில் உள்ளது. தமிழக கிராமப்புறங்களில் 77.5 சதவிகிதம் பேரும், நகர்ப்புறங்களில் 89 சதவிகிதம் பேரும் என ஒட்டுமொத்தத்தில் 82.9 சதவிகிதம் மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
மேலும், இந்த தரவரிசைப் பட்டியலில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 66.4 சதவிகிதம், ராஜஸ்தான் 69.7 சதவிகிதம், பிஹார் 70.9 சதவிகிதம் பேர் கல்வியுறவு பெற்றவர்களாக உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.