சென்னை: எல்.ஐ.சி.யின் வணிக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் வளர்ச்சி அதிகாரிகள்(டெவலப்பெண்ட் ஆபீஸர்கள்) 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. எல்ஐசியின் வர்த்தகம் குறைந்து வருவதால் அவர்கள் நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
காப்பீட்டுத் துறையில் கோலோச்சி வரும் நிறுவனங்களில் ஒன்று எல்ஐசி எனப்படும்இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம். நாடு முழுவதும் 20 கோடிக்கும் மேற்பட்ட காப்பீட்டுதாரர்களை கொண்டுள்ளது.

எட்டு மண்டலங்களையும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்டு இயங்கி வரும் எல்.,ஐ.சி., தென் மண்டலத்தில் மட்டும் 3.4 கோடி காப்பீடுதாரர்களுடன் சேவை புரிகிறது.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் 2-ஆவது பிரிவின் கீழ் வரும் வளர்ச்சி அதிகாரிகள் ("டெவலப்மெண்ட் ஆபீசர்) பதவி எல்.ஐ.சி.யில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எல்.ஐ..சி.யின் வணிக வளர்ச்சிக்கான பணியில், நாடு முழுவதும் தற்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளர்ச்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
எல்.ஐ.சி.யின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் வளர்ச்சி அதிகாரிகள் சமீபகாலமாக, குறைந்தபட்ச வணிக இலக்கை எட்டவில்லை என்று கூறி,சிறப்பு விதிகள் 2009-ன் கீழ் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, இதுவரை நாடு முழுவதும் சிறப்பு விதிகளின் கீழ் 1,800 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எல்.ஐ.சி. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால், பணி பாதுகாப்பற்றச் சூழல் நிலவுவதாக வளர்ச்சி அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பணி நீக்கத்தைச் சற்றும் எதிர்பாராத பணியாளர்கள் பலரும் தொடர்ந்து தற்கொலைக்கு முயலுவதும், மாரடைப்பால் இறப்பதும் அதிகரித்துள்ளது.
இது குறித்து, எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரிகள் கூறியதாவது: இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணைய விதிகள்படி (ஐ.ஆர்.டி.ஏ.) சந்தையில் கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் வரை விற்பனையில் இருந்த அனைத்துக் காப்பீட்டுத் திட்டங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. பழைய காப்பீட்டுத் திட்டங்களுக்கு சேவை வரி இல்லை. இதனால் அனைத்தும் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.
அதற்கு பதிலாக, 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சேவை வரியுடன் கூடிய காப்பீட்டுத் திட்டங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. புதியக் காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகமாகி ஒன்றரை ஆண்டுகளாகியும், சந்தையில் குறைந்த அளவிலான காப்பீட்டுத் திட்டங்களே விற்பனைக்கு உள்ளன. இவையும் மக்களிடம் போதிய வரவேற்பைப் பெறுவதில்லை. இதனால் வணிக இலக்கு குறைகிறது. போதிய பாலிசிகளை விற்பனை செய்யமுடியவில்லை.
குறைந்த எண்ணிக்கையில் புதிய காப்பீட்டுத் திட்டங்கள், புறச்சூழல் போன்றவற்றால் எல்.ஐ.சி.யின் காப்பீட்டு வருவாய் முந்தைய ஆண்டுகளைவிட குறைந்து வருகிறது. இதனால் வளர்ச்சி அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எளிதில் எட்ட முடிவதில்லை.
இதுவரை நாடு முழுவதும் சுமார் 1,800 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலக்கை எட்ட முடியாத சூழலில், சுமார் 25 ஆயிரம் பேர் பணியை இழக்கும் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.
தென் மண்டல எல்.ஐ.சி.யில் மட்டும் சுமார் 500 முதல் 700 பேர் வரை பணி இழக்கும் அபாயம் உள்ளது.
எவ்வளவு ஆண்டுகள் பணி செய்திருந்தாலும், எந்த நேரத்திலும் இலக்கைக் காரணம் காட்டி பணியிலிருந்து வெளியேற்றப்படும் சூழல் உள்ள நிலையில், மேலும் புதிதாக வளர்ச்சி அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை எல்.ஐ.சி. நிர்வாகம் நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்ஐசி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் பல வளர்ச்சி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications












