சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த பெருங்குடி கொட்டிவாக்கம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் புதிய வளாகத்தை அவர் திறந்து வைத்தார் என தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சட்டப் பல்கலைக்கழகம் சிறப்புடன் இயங்க இந்த வளாகம் கட்டப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, கட்டிமுடிக்கப்பட்ட வளாகத்தை அவர் இப்போது திறந்துவைத்தார்.
இந்த வளாகத்தில் கணினி மயமாக்கப்பட்ட நூலகம், இணையதள வசதியுடன் கூடிய கம்பியில்லா மண்டல வசதி, இளநிலை சீர்மிகு சட்டப்படிப்பு மாணவர்களுக்கென குளிரூட்டப்பட்ட 25 நவீன வகுப்பறைகள் கொண்ட கட்டடம், முதுநிலை சீர்மிகு சட்டப்படிப்பு மாணவர்களுக்கென குளிரூட்டப்பட்ட 25 நவீன வகுப்பறைகள் கொண்ட கட்டடம், கட்டடங்களில் தலா 3 கருத்தரங்கக் கூடங்கள், மாதிரி நீதிமன்ற அரங்கம், தலா 75 அறைகளுடன் கூடிய 2 விடுதிகள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.