சென்னை: தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 8 முதல் வழங்கப்படுகின்றன. இத்தகவலை, அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், நெல்லை, செங்கல்பட்டு வேலூர் ஆகிய 7 இடங்களில் அரசு சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு பி.ஏ.பி.எல்., என்ற 5 ஆண்டு சட்டப்படிப்பும், பி.எல் என்ற 3 ஆண்டு சட்டப்படிப்பும் கற்று கொடுக்கப்படுகிறது. வேலூரில் 3 ஆண்டு பி.எல் சட்டப்படிப்பு மட்டுமே கற்று கொடுக்கப்படுகிறது.
பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பில் சேர பிளஸ்-2 முடித்து இருக்க வேண்டும். பிளஸ்-2 தேர்வில் பொதுப்பிரிவினர் குறைந்த பட்சம் 45 சதவீத மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிபெண்களும் பெற்று இருக்க வேண்டும்.
பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது 20 என்றும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது 22 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பி.எல் படிப்பில் சேர ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்து இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிபெண்களும் பெற்று இருக்க வேண்டும்.
பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது 30 என்றும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளைக் கொண்ட இளங்கலை படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஜூன் 5 ஆம் தேதிக்குள்ளும், 5 ஆண்டு கால இளங்கலை படிப்புக்கு விண்ணபிக்க விரும்புவர்கள் ஜூன் 12 ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.