சென்னை: தமிழகத்தில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் பெறுவதற்கு இன்றுடன் கவுன்சிலிங் நிறைவடையவுள்ளது.
இரண்டாவது கட்ட கவுன்சிலிங்கில் இதுவரை அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர 555 மாணவர்கள் சேர்க்கைக் கடிதம் பெற்றுச் சென்றுள்ளனர்.
ஓமந்தூரார் வளாகம்
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள பி.டி.எஸ். இடம், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப தொடர்ந்து இந்த கவுன்சிலிங்கை மருத்துவக் கல்வித்துறையின் தேர்வுக் குழு நடத்தி வருகிறது.
நிறைவு...
இந்த நிலையில் இன்றுடன் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நிறைவடைகிறது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் நேற்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 24 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு பி.டி.எஸ். இடம், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 410 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் மாணவர்கள் சேர சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
435 பேருக்கு அட்மிஷன்
நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 435 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது. அவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சென்று சேர வேண்டும்.
காலியிடங்கள் எத்தனை?
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட அருந்ததி வகுப்பினருக்கு என ஒரு எம்.பி.பி.எஸ். காலியிடம் உள்ளது. சென்னை தாகூர் (2 இடங்கள்), மதுரை வேலம்மாள் (ஒரு இடம்), கோவை கற்பகம் (ஒரு இடம்) ஆகியவற்றில் மொத்தம் உள்ள 4 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு பி.டி.எஸ். காலியிடம் ஆகியவை காலியாகவுள்ளன. விரைவில் இந்த இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிகிறது.
912 இடங்கள்
சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் மொத்தம் 912 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களைச் சமர்ப்பித்தன. இவற்றில் கடந்த 3 நாள்களில் மொத்தம் 555 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன.
357 இடங்கள் காலி
மீதமுள்ள 357 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்ப சனிக்கிழமை தொடர்ந்து கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிந்த பின்னர் காலியிடங்கள் ஏற்பட்டால் அதைத் தொடர்ந்து 3-ம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வித் தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.