சென்னை: தேசிய திறனறித் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தேசிய திறனறித் தேர்வு தமிழகத்தில் நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இந்த விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவ, மாணவிகள் இம்மாத இறுதிக்குள் அதாவது செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை தலைமை ஆசிரியரிடம் கொடுத்துவிடவேண்டும். 30-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.