தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியுள்ளார்.

செப்டம்பர் 5ம் தேதியன்று ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர் சேர்க்கை போன்ற பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் போதிய மதிப்பெண் எடுக்காத மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றப்படுகின்றனர். அந்த மாணவர்களையும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது முயற்சியால் தேர்ச்சி பெற வைக்கின்றனர். இவ்வாறான சிறப்புமிக்க ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். அதேவேளையில் சமூகத்துக்குச் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பணியில் ஆசிரியர்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
மடிக்கணினி
தற்போது முதுநிலை ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுவிட்டன. இதனைத் தொடர்ந்து அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.
பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு
மேலும், மத்திய அரசின் நிதியுதவியோடு அரசுப் பள்ளிகளுக்கு 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அறிவார்ந்த சிந்தனையோடும், கூட்டு முயற்சியோடும் ஆசிரியர்கள் தங்களுடைய பணிகளை மேற்கொண்டால் பின்லாந்து நாட்டை விட தமிழகம் கல்வியில் முன்னோடியாகத் திகழும் என்றார்.


Click it and Unblock the Notifications












