தமிழக கல்வித்துறையில் சமீப காலமாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. டிஜிட்டல் வருகைப் பதிவேடு, வீட்டுப்பாடம், குறுஞ்செய்தி வாயிலாகத் தேர்வு முடிவுகள் என அன்றாடம் அதிரடி காட்டி வருகிறார் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். அந்தவகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினியும் வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் கல்வித் துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுகளில் தரவரிசை முறை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான சீருடையினை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்குச் சீருடை மாற்றப்பட்டு, தனியார் பள்ளிகளின் தரத்திற்கு நிகராக தமிழக அரசு சார்பில் சீருடை வழங்கப்படும்.
வரும் 2019 ஜனவரி முதல் வாரத்தில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். அதேபோல் அடுத்த மாதம் முதல் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.