சென்னை : அரசு பள்ளியில் நியமிக்கப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் அதிகாரிகள் தவறு ஏதும் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
தமிழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 4362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
காலியாக உள்ள இடங்களை நிரப்பவதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து 2015 மே மாதம் 31ம் தேதி எழுத்துத் தேர்வை நடத்தியது. எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த 24ஆம் தேதியன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
ஆய்வக உதவியாளர்
தேர்வை தமிழகத்தில் மொத்தம் 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதினார்கள். மொத்தம் 1900 யைங்களில் தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிவுகள்
தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களின் விபரங்கள் மாவட்ட வாரியாக இணைதளத்தில் வெளியிடப்பட்டது. அதனை அரசு தேர்வுகள் இணையதளத்தில் காணலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு
மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒருவர் நியமனத்திற்கு 5 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
அழைக்கப்படுபவர்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பணி நியமனம்
ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வெளிப்படையாக இருக்கும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித்தருகிறேன் என்று யாராவது பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம். அவ்வாறு மோசடி செய்பவர்கள் யாராக இருந்தாலும் முதன்மை கல்வி அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.