சென்னை : ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு இன்று கோவை மாவட்டத்தில் கலந்தாய்வு பணிகள் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது என கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள் முருகன் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஆய்வக உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் 9 ஏப்ரல் 2017 முதல் 11 ஏப்ரல் 2017 வரை நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.
இதற்காக எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், தற்போது நடைமுறையில் உள்ள மகளிர், ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு, தமிழ் வழியில் பயின்றோருக்கான ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை பெற்றவர்களுக்கும், முன்னுரிமையற்றோருக்கும் இடையேயான 1:5 என்ற விகிதாச்சாரம் ஆகியவை இனசுழற்சி முறையுடன் கடைபிடித்து இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டோருக்கான பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கான கலந்தாய்வு இன்று திங்கட் கிழமை காலை 10 மணிக்கு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இன்று அல்லது நாளை (செவ்வாய்க்கிழமை) பணி நியமன ஆணை வழங்கப்படும் என கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள் முருகன் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications












