சென்னை: அடிப்படை அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கே.வி.பி.ஒய். உதவித் தொகையைப் பெற ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக, பி.எஸ்சி., பி.எஸ்., ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ். ஆகிய படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை கே.வி.பி.ஒய். திட்டத்தின் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித் தொகைக்குத் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இந்தத் தேர்வு நாடு முழுவதும் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் 1 அறிவியல் பிரிவுகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் இந்தத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். அவர்கள் பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடத்தில் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதில் எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீதம் வரை மதிப்பெண் தளர்வு அளிக்கப்படுகிறது.
இந்த மாணவர்கள் 2017-18-ஆம் ஆண்டில் அடிப்படை அறிவியலில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போதுதான் அவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படும். மற்ற படிப்புகளில் சேர்ந்தால் அவர்களுக்கு இந்த உதவித்தொகைக் கிடைக்காது.
அதே நேரத்தில் அவர்கள் பிளஸ் 2 தேர்வில் அறிவியல், கணிதப் பாடத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற வேண்டும்.
மேலும் பிளஸ் 2 அறிவியல் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களும் பத்தாம் வகுப்பில் 80 சதவீதமும், பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீதமும் மதிப்பெண் பெற வேண்டும். அவர்களுக்கான கல்வி உதவித் தொகை அடுத்த ஆண்டிலிருந்து வழங்கப்படும்.
பி.எஸ்சி., ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ். படிப்புகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இந்த மாணவர்களும் பிளஸ் 2 வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சிப் பெற்றிருத்தல் அவசியம்.
மேலும் விவரங்களுக்கு http://www.kvpy.iisc.ernet.in என்ற இணையதளத்தை மாணவ, மாணவிகள் தொடர்புகொண்டு அறியலாம்.