சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்,. படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் 17 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளனர். இதில் கிருஷ்ணகிரி மாணவர் முதலிடம் பிடித்தார்.
2015-16-ம் கல்வியாண்டில் மருத்துவம், பல் மருத்துவம் பயில்வதற்கான மாணவ, மாணவிகள் தரவரிசைப் பட்டியல் ஜூன் 15-ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி மாலையில் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில்(2015-2016) சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
மாலை 6 மணிக்கு மேல் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in ஆகியவற்றில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தரவரிசைப் பட்டியலில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவன் நிஷாந்த் முதலிடத்தை பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த முகேஷ் கண்ணன் தரவரிசையில் இரண்டாம் இடத்தையும், திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரவீன் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர்.
மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 19-ல் தொடங்கில் 25-ல் நிறைவுறும்.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் (2257 இடங்கள்), ஒரு பல் மருத்துவக் கல்லூரி (85 இடங்கள்) மற்றும் தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர மொத்தம் 31,332 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்தவர்களில் 17 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நாமக்கல் பகுதி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த ஆண்டும் இல்லாத இந்த ஆண்டாக 17 மாணவர்கள் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண் எடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.