சென்னை: முதுகலை தொழில்நுட்பப் பட்டப்படிப்பு வழங்குவதற்காக பெங்களூருவைத் தளமாகக் கொண்டு செயல்படும் டெஸ்ஸால்வ் செமிகன்டக்டர் நிறுவனத்துடன் கலசலிங்கம் பல்கலைக்கழகம்(கேஎல்யு) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இந்தியாவில் செமிகன்டக்டர் பொறியியல் சேவைகள் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது டெஸ்ஸால்வ். இப்போது விஎல்எஸ்ஐ வடிவமைப்பு, சோதனை மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் ஒரு மேம்பட்ட முதுகலை தொழில்நுட்பப் பட்டப்படிப்பு திட்டத்தை(எம்.டெக்) வழங்குவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் குறிக்கோளாகும்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தரான மு. ஸ்ரீதரன் மற்றும் டெஸ்ஸால்வ் செமிகன்டக்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும் மற்றும் தலைவருமான ஸ்ரீனிவாஸ் சின்னமில்லி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இத்தொழில்துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளையும், போக்குகளையும் துல்லியமாக கணித்து கலசலிங்கம் பல்கலைக்கழகத்துடனான நெருங்கிய கலந்தாலோசனையின் அடிப்படையில் இம்முதுகலை பட்டப்படிப்புக்கான பாடத்திட்டமானது டெஸ்ஸால்வ் செமிகன்டக்டரால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த இன்டர்ன்ஷிப் செயல்திட்ட காலத்தின்போது, கேட் கல்வித்தகுதி பெற்ற மாணவர்களுக்கும், டான்செட்டில் முதலிடம் பிடித்தவர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்தவர்களுக்கும் முதல் 3 செமஸ்டர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.10,000/- என்ற உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சி நிறைவுக்குப் பின்னர் டெஸ்ஸால்வ் நிறுவனத்தில் அவர்கள் பெங்களுருவில், 8 மாதகால இன்டர்ன்ஷிப் செயல்திட்டத்திற்காக டெஸ்ஸால்வ் செமிகன்டக்டரால் பணிக்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பின்னர் மாதத்திற்கு ரூ.25000/- என்ற ஊதியம் இவர்களுக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்துக்கான தேர்ந்தெடுப்பு செயல்முறையானது, ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படும் ஒரு எழுத்துத் தேர்வைச் சார்ந்திருக்கும். நான்கு செமஸ்டர்களைக் கொண்டது இந்தக் கல்வித்திட்டம்.