சென்னை: நாட்டின் 18-வது இந்திய தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டை(ஐஐடி) மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாலக்காட்டி தொடங்கி வைத்துள்ளார்.
கேரள மாநிலத்தில் ஐஐடி தொடங்கப்படவேண்டும் என்பது அம்மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் ஐஐடி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஐஐடி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. பாலக்காட்டில் தற்காலிக வளாகம் ஐஐடிக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஐஐடி-யை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி காணொலி காட்சி மூலமாக நேற்று தொடங்கி வைத்தார்.
கேரளத்தில் 6-மாணவர்கள், உத்தர பிரதேசத்தில் 12 மாணவர்கள் உள்பட மொத்தம் 117 மாணவர்களைக் கொண்டு இந்த ஐஐடி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பி.டெக் படிப்பில் 4 பாடப்பிரிவுகள் முதல்கட்டமாக தற்காலிகமாக வளாகம் அமைத்துத் தொடங்கப்பட்டுள்ளது.
ஐஐடி. அமைக்க ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் புதிய கட்டடம் 500 ஏக்கர் பரப்பளவில் விரைவில் அமைக்கப்படும். அதுவரை இந்த தற்காலிக கட்டடம் செயல்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் கேரள மாநில மாணவ, மாணவிகளின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது.