தமிழகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் முறையில் துவங்கப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் சுமார் 1,199 கேந்திரிய வித்யலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 14 பள்ளிகள் உள்பட தமிழகத்தில் மட்டும் 48 பள்ளிகள் உள்ளன. வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இந்தப் பள்ளிகளில் தற்போது துவங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க வரும் மார்ச் 19-ஆம் தேதி மாலை 4 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் கேந்திர வித்யாலய தலைமையகத்தின் kvsonlineadmission.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதேபோன்று 11ம் வகுப்பைத் தவிர இரண்டாம் வகுப்பு முதல் மற்ற வகுப்புகளுக்கு ஏப்ரல் 2ம் தேதியன்று ஆன்லைன் பதிவு தொடங்கப்படும். இந்த வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வரும் ஏப்ரல் 9ம் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதனைத்தொடர்ந்து, 11 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு விண்ணப்பப் பதிவு தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.