நாம் சிறுவயதில் இருக்கும் போதே பள்ளியிலோ அல்லது உறவினர்களோ "பெரிய ஆளாகி நீ என்னடா ஆகபோற"ன்னு கேட்டா எதையும் யோசிக்காம டாக்டராவேன், ஐஏஎஸ் ஆவேன்னு சுட்டித் தனமான பதிலைக் கூறுவோம். ஏனென்றால் சிறுவயதில் இருந்தே இத்துறை தான் பொதுமக்களுக்கு சேவை அளிக்கக் கூடியதும், சுற்றத்தார் மதிக்கக் கூடிய பணியும் என திரைப்படம் தொடங்கி அன்றாட விசயங்கள் மூலம் நாம் அறிந்திருந்தோம்.
பின் நாட்களில் அதற்கான முயற்சி என்பது பெரம்பாலும் இருக்காது. ஒரு சிலர் அதனை மட்டுமே இலக்காகக் கொண்டு வெற்றியும் அடைவர். ஆனால், இங்கே ஓர் அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஏஎஸ் பட்டத்தினை வென்றிருப்பது பல்வேறு தரப்பினரையும் வியப்படையச் செய்துள்ளது.
எங்கேன்னு தெரியுமா ?
அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஏஎஸ் அதிகாரி ஆன விசித்திரம் நம்ம தமிழ்நாட்டுல அதுவும் கரூர் மாவட்டத்தில் தான் அரங்கேறியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில், ஒவ்வொரு வகுப்பு மாணவரின் பெயர்களுக்கு முன்பாகவும் பூக்கள், கனிகள், மரங்கள் மற்றும் அறிஞர்களின் பெயர்களைச் சூட்டும் விழா அன்மையில் நடைபெற்றது. அத்துடன் அப்பள்ளியில் செயல்படும் ஒவ்வொரு வகுப்பிலும் பொது அறிவுத் தேர்வு வைத்து, ஒரு ஐஏஎஸ், ஒரு ஐபிஎஸ் மாணவர்களும் வெற்றியடைந்துள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட க.பரமத்தி ஒன்றியம், தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்தான் இந்த விசித்திரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. மிகவும் பின்தங்கிய கிராமமாகக் கருதப்படும் இந்த வட்டாரத்தில் பள்ளி மாணவர்கள் சிறந்த அடிப்படைக் கல்வியினை பெற வேண்டும் என்ற முயற்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியரான மூர்த்தி பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
பெயர் சூட்டு விழா
தன் பள்ளி மாணவர்கள் பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி கணினி உள்ளிட்ட அறிவினையும் பெற வேண்டும் என்பதற்காக பல வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். அதன் மூலமாகவே, பாடங்களை கணினி மற்றும் இணையதளம் மூலமாக காட்சிப்படுத்தி பாடங்களும் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வட்டார கல்வி அலுவலரின் துணையுடன் மாணவர்களுக்கு பெயர்சூட்டும் விழாவை நடத்தியுள்ளார். அத்துடன் 15,000 ரூபாய் மதிப்பிலான வெள்ளை நிற சீருடைகளையும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இம்மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.
பள்ளி தலைமை ஆசிரியர்
கரூர் மாவட்டத்திலேயே கடைக்கோடி பகுதியில் உள்ள ஊர் இது. இந்தப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் மிகவும் குறைவாக இருந்தது. நான் இப்பள்ளிக்கு பணிக்கு வந்த நாள் முதல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து இப்பள்ளியையும், மாணவர்களின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தி.
மாணவர்களிடையே விழிப்புணர்வு
மாணவர்கள் மத்தியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் குறித்த விழிப்புணர்வை சிறு வயதில் இருந்தே ஏற்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டின் துவக்கத்திலேயே பொது அறிவு குறித்தான கேள்விகள் உள்ளடக்கிய தேர்வு பிற ஆசிரியர்கள் உதவியுடன் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டம் வழங்கப்படுகிறது.
அடையாளச் சான்று
அவ்வாறு தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அடையாளமாக ஓர் சான்று அட்டை வழங்கப்படுகிறது. தினமும் அந்த அடையாள அட்டையை அந்த மாணவர்கள் அணிந்து வர வேண்டும். அதோடு நின்றுவிடாமல் பள்ளி வகுப்பறை பராமரிப்பில் தொடங்கி பள்ளி வளர்ச்சி குறித்து கலந்துரையாடுவது வரை அந்த மாணவர்கள் பங்கெடுப்பார்கள்.
மரம், மலர், கனி...
ஐஏஎஸ், ஐபிஎஸ் போலவே மாணவர்களுக்கு மரம், மலர், கனிகளின் பெயர்கள் மனதில் நிற்க வேண்டும் என்ற முயற்சியில் மாணவர்களின் பெயர்களுக்கு முன்னால் அந்த பெயர்களைச் சேர்த்து அழைக்கப்படுகிறது. அதன் முயற்சிதான் தற்போது இந்த விழா கொண்டாடப்பட்டுள்ளது. முதலாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்னால், மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு
இரண்டாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்பு கனிகளின் பெயர்களும், மூன்றாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன், காய்கறிகளின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெயர்களுக்கு முன், மரங்களின் பெயர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.
வேடிக்கையல்ல!
இது சற்று வேடிக்கையான விசயமாக தோன்றினாலும் இன்றைய காலகட்டத்தில் மறக்கடிக்கப்பட்டு வரும் காய், கனி, மரம் மற்றும் அறிஞர்களின் பெயரை மீண்டும் நினைவு கூற இது வழிவகுக்கும்.
கனவு காண்போம்
மேலே கூறியது போல நாமும் நம் சிறுவயதில், ஆரம்ப பள்ளிப் பருவத்தில் இதுபோன்ற பெயர்களை நோட்டில் நம் பெயர்களுக்கு முன்னால் எழுதி அழகு பார்த்திருப்போம். ஏதோ ஓர் காரணம், மாற்றம் அது வெறும் பெயராகவே முடிந்திருக்கும். ஆனால், தற்போது இப்பள்ளி மேற்கொண்டுள்ள முயற்சி இதோடு நின்றுவிடாமல் சிறு மாணவர்களின் கனவு நினைவாக வாழ்த்துவோம்.
இந்த நடிகையுடன் டேட்டிங்க் போவீங்களா? - நறுக் பதிலளித்து வேலை வாங்கிய நபர்!