இன்றைய தினத்தில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பித்து வருகின்றனர்.
ஆனால், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை அந்தந்த மாநில முதலமைச்சர்களே ஏற்ற வேண்டும் என்று போராடி உரிமையைப் பெற்றுத் தந்த தமிழர் யார் தெரியுமா?
திமுக தலைவர் கருணாநிதி
தமிழக முதலமைச்சராக ஐந்து முறை செயல்பட்டவர் திமுக தலைவர் கருணாநிதி. முன்னொரு காலத்தில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில், ஆளுநர்கள்தான் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி வந்தனர். இந்த நடைமுறையினை மாற்றி குடியரசு தினத்தில் ஆளுநர்களும், சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என முதல் முறை போராட்டத்தை முன்னெடுத்தவர் கருணாநிதி.
இந்திரா காந்தி
அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு இது குறித்து கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதினார். இதற்கு இந்திரா காந்தியும் அனுமதி அளித்தார்.
ஆகஸ்ட் 15
பிரதமரின் அனுமதி கிடைத்து, 1974 ஆகஸ்ட் 15ம் தேதி கருணாநிதி தேசியக் கொடியை முதன் முதலில் முதலமைச்சராக ஏற்றினார். இதன் மூலம் சுதந்திர தினத்தில் கொடியேற்றிய நாட்டிலேயே முதல் முதலமைச்சர் என்னும் பெருமையை அவர் பெற்றார்.
நெகிழ்ந்த போன பிற மாநில முதல்வர்கள்
இவ்வாறு மாபெரும் உரிமையைப் பிற மாநில முதலமைச்சர்களுக்கும் போராடிப் பெற்றுத் தந்த கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி இயற்கை எய்தினார். அப்போது அவரது உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்ததைக் கண்ட பிற மாநில முதலமைச்சர்களும், கருணாநிதி தங்களுக்குப் பெற்றுத் தந்த உரிமையை எண்ணி நெகிழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.