கர்நாடக மாநிலத்தில் வரும் நாளாளுமன்றத் தேர்தலின் போது வாக்களிக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு பள்ளிகளில் கூடுதல் மதிப்பெண்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகித வாக்கு எண்ணிக்கையினை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கர்நாடகாவில், தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் வாக்களித்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு 4 மதிப்பெண் கூடுதலாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டம் அமலில் இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் சூடு பிடித்துள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் முதன்மை செயலாளர் கூறுகையில், இதுபோன்று மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படும் என்று அறிவித்தால், மாணவர்கள் அவர்களது பெற்றோர்களை வாக்களிக்க வற்புறுத்துவார்கள். பள்ளியில் கிடைக்கும் இந்த 4 மதிப்பெண்கள் நாட்டின் தலையெழுத்தையே மாற்றுவதற்கு அச்சாரமாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டே இத்தகைய புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
இவ்வாறு வாக்களிக்கும் பெற்றோர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதைப் பள்ளிகளில் காண்பித்தால், சம்பந்தப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு தேர்வில் 4 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்றார்.