பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க கர்நாடக மாநில அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கென புதிய, பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க கர்நாடக மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது, கர்நாடக மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை (DSERT) சார்பில் குழுவை அமைத்து இதற்காக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, 1, 2 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை எடை 1.5 கிலோ முதல் 2 கிலோ வரை இருக்க வேண்டும் எனவும், 3 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தகப் பை 2 முதல் 3 கிலோ வரையிலும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தகப் பை 3 கிலோ முதல் 4 கிலோ வரையிலும், 9 மற்றும் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தகப் பை 4 கிலோ முதல் 5 கிலோ வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளும் இந்த அறிவிப்பை பின்பற்றுகிறதா என்பதை மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. புத்தகப்பையின் எடை குறையும் என்பதால் கர்நாடக மாநில பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
கர்நாடகாவில் பள்ளி மாணவர்களின் புத்தகப்பை எடையை குறைக்க 2019-ம் ஆண்டிலேயே அந்த மாநில அரசு முடிவு செய்தது.
புத்தகப்பையின் சுமையைக் குறைக்க அப்போது, குழந்தை மற்றும் சட்டம் மையம், இந்திய பல்கலைக்கழக தேசிய சட்டப்பள்ளி ஆகியவை இணைந்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
இதுதவிர, அப்போது புத்தகப்பை சுமையால் குழந்தைகளின் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் ஆராய டாக்டர் வி.பி. நிரஞ்சன்ராத்யா தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.
ஆய்வு, ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின்னர் பள்ளி மாணவர்களின் புத்தகப்பை சுமையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை வல்லுனர் குழுவினர் அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
இதை பரிசீலித்து வந்த அரசு வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று கொண்டு பள்ளி மாணவர்களின் புத்தகப்பை எடைக்கு கட்டுப்பாடுகளை அப்போது விதித்தது. அதன்படி பள்ளி மாணவர்களின் எடையில் 10 சதவீதம் மட்டுமே புத்தகப்பை எடை இருக்க வேண்டும். 10 சதவீத எடைக்கு மேல் இருக்க கூடாது.
1 முதல் 2-ம் வகுப்பு மாணவர்கள் 1.5 கிலோ முதல் 2 கிலோ வரையும் 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள் 2 கிலோ முதல் 3 கிலோ வரையும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் 3 முதல் 4 கிலோ வரையும், 9 முதல் 10-ம் வகுப்பு மாணவர்கள் 4 முதல் 5 கிலோ வரையும் எடை கொண்ட புத்தகப்பையை சுமக்கலாம் என்று அப்போது அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது புத்தகப்பையை பள்ளிகளிலேயே வைத்து செல்ல அனுமதிக்கலாம். வகுப்பறையில் புத்தகப்பைகளை வைக்க தனி இடம் ஒதுக்கி தர வேண்டும். ஒவ்வொரு மாதமும் 3-வது சனிக்கிழமையை புத்தகப்பை இல்லாத நாளாக கடை பிடிக்க வேண்டும்.
எந்த புத்தகங்களை பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் என்பதை மாணவர்களுக்கு தெரிவித்து கால அட்டவணைகளை முன்கூட்டியே வழங்கலாம்.
குழந்தைகள் குடிநீர் பாட்டில்களை கொண்டு வராமல் தடுக்க வகுப்பறைகளிலேயே குடிநீர் வசதியை செய்து தரலாம். பள்ளிகளில் பாதுகாப்பான தரமான உணவு வழங்கும் உணவகங்களை நிறுவலாம் என்றும் அப்போது கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கர்நாடக மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை (DSERT) ஆய்வு, ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புத்தகப் பையின் சுமையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications












