ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்தக் கூடாது என கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி வழங்கும் வகையில் பல பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
லேப்டாப்பில் குழந்தைகள்
குறிப்பாக, கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பெங்களூரின் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லேப்டாப் அல்லது செல்போன்களை பயன்படுத்தி குழந்தைகள் பாடம் கற்று வருகின்றனர்.
வசதியற்ற குழந்தைகள்
இருப்பினும், கர்நாடகாவின் கிராமப்புற பகுதிகளில் படிக்கும் குழந்தைகள் இணையதளம், போன் உள்ளிட்ட வசதிகள் இன்றி எவ்வாறு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது என செய்வதறியாது உள்ளனர். மேலும், இதுபோன்று, மின்சாதன பொருட்கள் முன்பாக சிறுவர்கள் நேரத்தைக் கழிப்பதால் அவர்களுக்கு உடல் மற்றும் மன அழுத்தம் அதிகம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
ஆய்வறிக்கையில் அதிர்ச்சி
இதனிடையே, பெங்களூரில் செயல்பட்டு வரும் மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) இது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், அவர்கள் 6 வயது வரையிலான குழந்தைகள் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கு மேல் செல்போன் அல்லது மின்சாதன உபகரணங்களை முன்பாக அமர்ந்து இருப்பது உடல் நலத்தை பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஆன்லைன் வகுப்பிற்கு எதிர்ப்பு
அதனைத் தொடர்ந்து, ஐந்தாம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, எல்கேஜி, யுகேஜி மற்றும் துவக்கப்பள்ளி வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது துவக்கக் கல்வி துறை அமைச்சர் சுரேஷ்குமார் அறிவித்தார்.
7ம் வகுப்பு வரை நோ ஆன்லைன் கிளாஸ்
இதனிடையே, கர்நாடக சட்டத் துறை அமைச்சர் மாதுசாமி இன்று செய்தியாளர்களைச்ச சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், கிராமப்புற மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, ஒன்று முதல் 7ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கூடாது என முடிவெடுத்துள்ளோம். வரும் வெள்ளிக்கிழமை, அமைச்சரவையில் இந்த முடிவு இறுதி செய்யப்படும் என்று தெரிவிததுள்ளார்.
தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்புகள்
தமிழகத்திலும், சில தனியார் பள்ளிகள் அதிக கட்டணத்துடன் கட்டாய ஆன்லைன் கிளாஸ் எடுத்து வரும் நிலையில் இங்கும் குழந்தைகளுக்கான வகுப்புகளை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.