புதுடெல்லி: கர்நாடக பொது நுழைவுத் தேர்வு (KCET) திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்திலுள்ள பல்வேறு தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கு கர்நாடக மாநில அரசு கேசிஇடி என்னும் பொது நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் கர்நாடக மாநிலம் முழுவதிலுமுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும்.
இந்த ஆண்டு இந்தத் தேர்வு மே 4, 5-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்படும் என்று செய்திகள் வந்தன. கர்நாடக மாநில 2-ம் ஆண்டு பியூசி வேதியியல் வினாத்தாள் லீக்கானதால் சிஇடி தேர்வு ஒத்திவைக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் இந்தத் தகவலை கர்நாடக மாநில தொடக்கம் மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் கிம்மனே ரத்னாகர் மறுத்துள்ளார்.
இந்தத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், தேர்வு எந்த நிலையிலும் ஒத்திவைக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன என்றும், தேர்வை ஒத்திவைக்க மாட்டோமென்றும் பியூ கல்வித்துறை இயக்குநர் பல்லவி அக்ருதி தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்களுக்கு http://kea.kar.nic.in/cet_2016.htm என்ற இணையதளத்தை மாணவர்கள் தொடர்புகொள்ளலாம்.