சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பான சூழலில் படிக்க வேண்டும் என்பது அவர்களின் உரிமை. மாணவ மாணவியரிடையே சமநிலையை உருவாக்க வேண்டும். ஈவ்டீசிங் , பாலியியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை பள்ளி நிர்வாகம், பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் உருவாக்க வேண்டும்.
மேலும், மாணவியருக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பிக்க வேண்டும். விடுதிகளில் மன ரீதியான பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டும். அவர்கள் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்தி அவர்களின் சவால்களை தாங்களே சந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும்.
மாணவியர் புகார் செய்வதற்கு வசதியாக பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு குழுவை அமைக்க வேண்டும். புகார் தெரிவித்தால் அந்த குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் பெட்டிகளையும் வைக்க வேண்டும். எழுத்து பூர்மான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை உளவியல் ரீதியாக கவனிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கு கவுன்சலிங் நடத்த வேண்டும். பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் மாணவர்களின் வகுப்பறை, விளையாடும் இடம் ஆகியவற்றில் இடம் பெற வேண்டும்.
குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் எண் 1098 என்பது அனைத்து மாணவ மாணவிருக்கும் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.