கான்பூர் : கான்பூர் ஐஐடி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கருப்பு கவுன் அணிவதற்கு தடை விதித்துள்ளது. பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்ட கருப்பு கவுன் முறைக்கு பதிலாக நம்முடைய பாரம்பரிய உடைகளையே அணிய வேண்டும் என்றும் அதிரடியாகக் கூறியுள்ளது.
இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். பொதுவாகவே நம் முன்னோர்கள் கருப்பு ஆடைகள் நல்ல நாட்களில் விஷேச நிகழ்ச்சிகளில் போடக்கூடாது என்பர். ஆனால் நாம் படித்து கஷ்டப்பட்டு பட்டம் வாங்கும் நிகழ்ச்சிக்கு பள பளன்னு பட்டாடை உடுத்திச் சென்று விட்டு பின்பு அதனை மறைப்பது போல் ஒரு கருப்பு கோட்டை போட்டுக்கொண்டு பட்டம் வாங்குவோம்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்துவரும் கருப்பு கவுனை மாற்ற கான்பூர் ஐஐடி முடிவு செய்துள்ளது. கருப்பு கவுனுக்கு மாற்றாக நம்முடைய பாரம்பரிய உடைகளான பைஜாமா குர்தா மற்றும் சுடிதார் போன்றவற்றையே அணியலாம் என்று கூறியுள்ளது. இதன் பட்டமளிப்பு விழா ஜூன் 15, 16 தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த விழாவில் டாடாசன்ஸ் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள தமிழர் சந்திரசேகரன் கலந்து கொள்கிறார்.
பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய கறுப்பு கவுனுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாரம்பரிய உடைகளை ஊக்குவிக்கும் வண்ணம் ஐஐடி கான்பூர் நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.