சென்னை: மருந்தாளுநர் படிப்பு முடித்தவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாக தமிழக மருந்துகள் கட்டுப்பாடு இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநர் எம்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
மருந்தாளுநர்கள் தின விழா சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எம்.கண்ணன் பேசியது:
மருந்தாளுநர் துறை அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் துறையாகவுள்ளது. மருந்தாளுநர், முதுநிலை மருந்தாளுநர் படிப்பு படித்தவர்களுக்கு 23 வகையான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
மருந்து தயாரிப்பு, மருந்துகளைப் பிரபலப்படுத்துதல், விற்பனை, மருந்துசார் உணவுப் பொருள்கள் தயாரிப்பு, இந்திய மருந்துகளைத் தயாரித்தல், அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தல் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
மேலும் மருந்து தயாரித்து, விற்பனை செய்வதை ஒழுங்குப்படுத்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், ஆசிரியர் வேலைவாய்ப்புகளும் உள்ளன. எனவே மருந்தாளுநர் படிப்புகளை முடிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் அவர்.