சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் களப்பணியாளர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒருங்கிணைக்கப்பட்ட சேய்நல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலுள்ள அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து கருத்தாய்வு மையத் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணிக்கு களப்பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இப்பணிக்கான ஆள்கள் தேர்வு செய்வதற்கான முகாம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் காஜாமலை வளாகத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
ஆய்வில் ஈடுபடும் களப்பணியாளர்கள் கிராம மற்றும் ஊரகத்திலுள்ள வீடுகளுக்குச் சென்று ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான புள்ளி விவரங்களை டேப்லெட் அல்லது ஆண்ட்ராய்டு வசதி கொண்டசெல்லிடப்பேசியில் சேகரிக்க வேண்டும்.
ஏதேனும் இளங்கலைப் பட்டம் முடித்த, நல்ல தொடர்பாடல் மற்றும் கணினித் திறன் மிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்நதெடுக்கப்படும் பணியாளர்கள் திட்ட வேலைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். திட்ட அறிக்கையின் காலம் 4 மாதங்கள் ஆகும்.
திட்டப்பணிகளுக்காக களப்பணியாளர்களுக்கு ரூ.16,500 உதவித் தொகை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.