சென்னை: திருவாரூர் அருகே சொரக்குடியில் நேற்று நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8,156 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஏராளமானோர் இந்த வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
சொரக்குடியில் வேலைவாய்ப்புத்துறை, தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்கம், திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது. இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கிவைத்தார். முகாமில் அவர் பேசியது:
டெல்டா மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் மற்றும் மகளிர் பயன்பெறும் வகையில் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி திருவாரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. 264 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளன.
முகாமில் பொறியியல் பட்டதாரிகள் 1,045, பட்டதாரிகள் 2,936, பட்டயப்படிப்பு படித்தவர்கள் 2,897, ஐடிஐ தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 2,532, பள்ளி இறுதி வகுப்பு முடித்தவர்கள் 9,710, எஸ்எஸ்எல்சி வகுப்புக்கு கீழ் படித்தவர்கள் 5,165 என மொத்தம் 24,285 பேருக்கு வேலையளிக்கத் தனியார் நிறுவனங்கள் முடிவெடுத்தன. நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 57,315 பேர் பங்கேற்றதில், 19 மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4,825 பேர் நேரடி நியமனம் பெற்றனர்.
திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக 2,726 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 605 பேர் என மொத்தம் 8,156 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன என்றார் காமராஜ்.