சென்னை: வேலைவாய்ப்பு முகாம்களை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவுள்ளது.
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அக்டோபர் மாதத்திலும், இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு டிசம்பரிலும் இந்த வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கும், இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு முகாம்களை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
நடப்பாண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் மைக்ரோ சாஃப்ட், அடோப், ஃபிலிப்கார்ட் என்பன உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் வளாகத் தேர்வு (கேம்பஸ் இன்டர்வியூ) நடத்தியதில் 120 மாணவ, மாணவிகள் ரூ. 15 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் 5-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
தொடர்ந்து டிசம்பரில் இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த முறை ஒரு மாணவருக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அதாவது, வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வாய்ப்பைப் பெற்ற ஒரு மாணவருக்கு, மீண்டும் துணை நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












