சென்னை: புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
நாட்டிலுள்ள சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று புதுவை ஜிப்மர் ஆகும். இந்தக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான 150 இடங்களுக்கு நுழைவுத் தேர்வு கடந்த 7ஆம் தேதி ஆன்-லைனில் நாடு முழுவதும் உள்ள 75 நகரங்களில் நடைபெற்றது. இதற்காக 1.37 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
புதுவையில் 6, காரைக்காலில் 1, கடலூரில் 3, விழுப்புரத்தில் 4 மையங்களில் இத்தேர்வுகள் நடைபெற்றன. தேர்வு முடிவுகள் நேற்று இரவு ஜிப்மரில் வெளியிடப்பட்டது.
அகில இந்திய அளவில் நடைபெற்ற இந்த நுழைவுத் தேர்வில் மாணவர் வெர்னாமாத்யூ 200-க்கு 187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 40 இடங்களில், யாடுகிருஷ்ணா என்ற மாணவர் 183 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைத் தட்டிச் சென்றார்.
புதுச்சேரி மாணவி ஜமுனா 181 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தைக் கைப்பற்றினார்.
மேலும் இத்தேர்வில் புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஜான் இம்மானுவேல், டேனியல் இம்மானுவேல், குருதர்ஷன், விஸ்வநாத், மிதுன், சாஹித்யன், விவேக் ஆகிய 7 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இவர்களை அந்தப் பள்ளியின் முதல்வர் பாஸ்கல்ராஜ், துணை முதல்வர் டோமினிக் சேவியோ மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.