இந்தியாவில் ஜியோ தொலைத்தொடர்பு சேவை மிகப்பெரிய ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ள நிலையில் தற்போது அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி அளிக்க உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 2,100-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அதிவேக இணைய இணைப்பு வசதிகளை அளிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.4,000 கோடியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உத்தரகண்டில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய முகேஷ் அம்பானி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அவர் கூறுகையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிற தொழில்கள் மற்றும் நிறுவனங்களை ஜியோ ஊக்குவிக்கும். உத்தரகண்டை டிஜிட்டல் பூமியாக மாற்றவே இத்திட்டம். ஜியோவால் உத்தரகண்டின் சுற்றுலாத் துறை நிலையான வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சுகாதாரத் துறை, கல்வி மற்றும் அரசு சேவைகள் விநியோகத்தை ஜியோ மேம்படுத்தும்.
உத்தரகண்டில் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் 200-க்கும் அதிகமான கல்லூரிகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இணைய இணைப்புகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்புகளும், வருவாயும் கிடைக்கும் என்றார்.