கொரேோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஒத்திவைக்கப்பட்ட நீட், ஜெஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-21-ஆம் ஆண்டிற்கான மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடத்தப்பட இருந்தது. இதனிடையே, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதோடு, நாடு முழுவதும் உள்ள ஐஐடி , என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான ஜெஇஇ தேர்வும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய தேதிகளை மே 5 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, இன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நீட், ஜெஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகளை அறிவித்துள்ளார்.
அதன்படி, ஐஐடி- ஜெஇஇ மெயின் தேர்வு வரும் ஜூலை 18, 20, 21,22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் எனவும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று நீட் தேர்வு ஜூலை 26 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் இந்த வாரம் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.