புதுடெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் எளிதாக சேர உதவும் ஜேஇஇ பிரதானத் தேர்வு 10.4 லட்சம் மாணவ, மாணவிகள் நேற்று எழுதினர்.
ஜேஇஇ தேர்வுகளை சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் இந்தத் தேர்வை நடத்தி இதில் வெற்றி பெறும் மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம், என்ஐி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான பிரதானத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. கடந்த ஆண்டு இந்தத் தேர்வுக்காக 13.04 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டில் மாணவர் பதிவு சற்றுக் குறைந்தது. அதாவது 12.07 லட்சம் மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தத் தேர்வு நேற்று நடைபெற்றபோது 10.4 லட்சம் மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.
இது ஆஃப்லைன் தேர்வாகும். ஏப்ரல் 9-ல் ஆன்-லைன் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 1.63 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். கடந்த ஆண்டில் இதே மாநிலத்திலிருந்து 2.46 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து 1.5 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
கடந்த வாரம் மட்டுமே சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததால், மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக நேரம் கிடைக்கவில்லை. அதனால்தான் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.