சென்னை: ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின்(ஜே.இ.இ.) முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தமிழக மாணவர்கள் 451 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
www.jeeadv.iitb.ac.in என்ற இணையதளத்தில் ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்து அறியலாம்.
என்ஐடி, ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில் பிரதானத் தேர்வு, முதன்மைத் தேர்வு என 2 தேர்வுகள் நடத்தப்படும். கடந்த மே மாதம் நடந்த முதன்மைத் தேர்வில் 1,17,238 பேர் பங்கேற்றனர். இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 23,407 மாணவர்கள், 3,049 மாணவிகள் என மொத்தம் 26,456 பேர் தேர்வு பெற்றனர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாத்வத் ஜாக்வானி முதலிடம் பெற்றார். சாத்வத் 504 மதிப்பெண்களுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
இதில் தமிழகத்திலிருந்து எழுதிய 2,158 பேரில் 451 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த எஸ். ராகவன் என்ற மாணவர் 504-க்கு 364 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஹர்பித்சிங்(341), கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் (329), அயனாவரத்தைச் சேர்ந்த அனிரூத்(328), சேத்துப்பட்டுவைச் சேர்ந்த காவியா (327), ஆவடியைச் சேர்ந்த விநாயக் (325), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கவிதா (319), ஈரோட்டைச் சேர்ந்த ஆதவன் நம்பி (318), எழும்பூரைச் சேர்ந்த ஷம்பித் (315), முகப்பேர் மேற்கைச் சேர்ந்த நிஷாக்குமார்(314) ஆகியோர் தமிழக அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.