சென்னை: ஏழை-எளிய மாணவர்களுக்கு படிப்பதற்கு வசதியாக சூரிய சக்தியால் இயங்கும் மேஜை விளக்குகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
முதல்வர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, ஏழை-எளிய மாணவ-மாணவியர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் மேஜை விளக்குகள் வழங்கும் திட்டத்தை தனது சொந்த செலவில் வழங்கிட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சி.கல்யாண் விருப்பம் தெரிவித்தார்.
மேலும், இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று, தலைமைச் செயலகத்தில், ஏழை-எளிய மாணவ, மாணவியருக்கு சூரிய சக்தியால் இயங்கும் 6,888 மேஜை விளக்குகள் வழங்கும் திட்டத்தை அவர் அண்மையில் தொடக்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக, 5 மாணவர்களுக்கு மேஜை விளக்குகளை முதல்வர் வழங்கினார். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் பாடல்கள் அடங்கிய "அம்மா பாமாலை' குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த குறுந்தகட்டை முதல்வர் ஜெயலலிதாவிடம் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் வழங்கினர்.