சென்னை: அறிவித்த ஒரே வாரத்தில் கல்லூரியைத் தொடங்கி சாதனை படைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்ற பின்னர் தனது தொகுதியில் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஆர்.கே. நகர் பகுதியில் கல்லூரி தொடங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த நிலையில் கட்டடம் தேர்வு செய்யப்பட்டு கல்லூரி தொடங்கப்பட்டு சேர்க்கைகளும் தொடங்கப்பட்டுவிட்டன.
அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் கல்லூரியைத் திறந்து சாதனை படைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. சென்னையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அரசு கலை - அறிவியல் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டம், கோடநாடு முகாம் அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலம் புதிய கல்லூரியை அவர் திறந்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அரசு கலை-அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான நடுநிலைப் பள்ளியில் புதிய அரசு கலை-அறிவியல் கல்லூரியை நடப்புக் கல்வியாண்டில் தொடங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், ஆசிரியர்-பணியாளர் பணியிடங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.8.28 கோடி நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார். அதன்படி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டையில் புதிய அரசு கலை-அறிவியல் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
ஐந்து மாணவ-மாணவியருக்கு கல்லூரி சேர்க்கை அனுமதிக் கடிதங்களை அவர் அளித்தார். அப்போது, நன்றாக படித்து வாழ்வில் முன்னுக்கு வர வேண்டுமெனவும், ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் எனவும் மாணவ-மாணவிகளிடம் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தண்டையார்பேட்டையில் திறந்து வைக்கப்பட்ட புதிய அரசு கலை-அறிவியல் கல்லூரியானது, சென்னையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கப்பட்ட கல்லூரியாகும்.
புதிய கல்லூரி தொடக்க விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உயர்கல்வித் துறைச் செயலாளர் செல்வி அபூர்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.