சென்னை: ரூ.100 கோடி செலவில் 440 புதிய பஸ்களை போக்குவரத்துக்காக முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் இந்த வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப போக்குவரத்து சேவைகளை விரிவாக்க வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் சார்பில் 23 வழித்தடங்களில் 50 மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான பஸ்களும், 4 புதிய வழித்தடங்களில் 4 பஸ்களும் இயக்கப்படவுள்ளன.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 202 பஸ்கள் புதிதாக இயக்கப்படுகின்றன. அத்துடன், சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 78 பஸ்களும், கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 25 பஸ்களும், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 63 பஸ்களும் என 422 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மலைப்பிரதேசங்களில் இயக்குவதற்கு ஏதுவாக 18 சிற்றுந்துகள் (‘ஸ்மால் பஸ்') இயக்கப்படுகின்றன.
அந்த வகையில்தான் மொத்தம் 100 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் இந்த 440 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன.
இந்த வாகனங்களை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் த.பிரபாகர ராவ், மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மே.பாலகிருஷ்ணசாமி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.