பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களில் 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்படும் என அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், திங்களன்று (நேற்று) போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்ற காவலில் உள்ள 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, ஆசிரியர்கள் மீது அரசு இதே அடக்குமுறையை மேற்கொண்டால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என ஆசிரியர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












