ஜாக்டோ ஜியோ சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அரசு அலுவலக செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் நாட்களில் எடுக்கப்படும் விடுப்பு விதிமீறலாகக் கருதப்பட்டு தொடர்புடைய ஊழியர்களின் பெயர் ஊதியத்துக்கோ, படிகளுக்கோ பட்டியலிடப்படக்கூடாது.
அவர்கள் மீது தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் பெறும் பகுதி நேர ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தெரிந்தால் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
மருத்துவ விடுப்பு தவிர மற்ற விடுப்புகள் அனுமதிக்கப்படாது. மருத்துவ விடுப்புக்காக வழங்கப்படும் சான்றிதழ்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்ட பின்பே விடுப்பு அளிக்கப்படும். அதில் முறைகேடு எதுவும் தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
போராட்டத்தின் போது அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தொடர்புடைய செயலாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேலைநிறுத்த காலத்தில் ஒவ்வொரு துறையிலும் உள்ள ஊழியர்களின் வருகைப் பதிவேட்டு விவரங்களைக் காலை 10.15 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.