உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொரோனாவிற்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல. ஒரு மாதத்தைக் கடந்து நாட்டில் ஊரடங்கு நீடித்துவரும் நிலையில் இதனால் ஐடி துறையில் பணியிழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஒட்டுமொத்த இந்தியாவைப் பொறுத்தவரையில் சுமார் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய்த் தொற்றைக் கட்டப்படுத்தும் வகையில் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாகக் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.
இதனிடையே, தொழில்நுட்ப நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தகவல் தொழில்நுட்பச் சேவைகளுக்கான தேவை குறைந்துள்ளதால் இத்துறையின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், வேறு வழியின்றி பணியாளர்களின் ஊதியம் பிடித்தம், வேலையை விட்டு நீக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதோடு புதிய வேலை வாய்ப்புகளும் சில காலங்களுக்கு இருக்காது.
தற்போதைய அறிவிப்பின் படி, மே 3-ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும். அதனைத் தொடர்ந்து சிறிது சிறிதாக இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இந்திய ஐடி துறையில் இந்த ஆண்டு முழுவதும் இதே நிலை தான் தொடரும் என்று தகவல் தொழில்நுட்பத் துறையின் மூத்த நிபுணர் மோகன் தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான மோகன் தாஸ் பாய் இதுகுறித்து கூறுகையில், தற்போதைய கொரோனா பாதிப்பு சமயத்திலும் சிறப்பான முயற்சிகளை ஐடி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா நொய் தொற்றால், ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்திலும் 90 சதவிகித ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதித்து சிறப்பான சேவையை மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும் ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைச் சுழற்சி முறையில் பணியாற்றுவதைக் கடைபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஊதிய குறைப்பு, பணி உயர்வு இருந்தாலும் ஊதிய உயர்வு இல்லாமை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளும் இந்த ஆண்டில் இருக்க வாய்ப்புகள் உள்ளது என்று மோகன் தாஸ் பாய் கருத்து தெரிவித்துள்ளார்.