இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் வகையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கு, கொரோனா தொற்றுக் காலத்தில் இந்திய மாணவர்களைத் தேர்வு எழுத வலியுறுத்துவது நியாயமற்றது என சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் அதிரடியாகக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு நாளும் இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் முதல் நாடுமுழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர்.
நீட், ஜேஇஇ தேர்வு கட்டாயம்
இந்நிலையில், மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு மற்றும் பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ தேர்வுகளை நடத்த மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
இந்தியாவில் கொரோனா பொதிப்பு தொடங்கிய காலம் முதலே அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அதன்படி, மே 3ம் தேதியன்று நடைபெறவிருந்த நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜே.இ.இ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இருந்து மாணவர்கள் நலனில் அக்கறையின்றி செயல்படும் மத்திய அரசுக்கு எதிராக, 11 மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தேர்வு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடுப்பான மாணவர்கள்
நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நீட், ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், அதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் பிரச்சாரம்
அதனைத் தொடர்ந்து, மாணவர்கள், அரசு தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து #PostponeNEET_JEE, #PostponeJEE_NEETinCOVID, #modiji_postponejeeneet உள்ளிட்ட ஹாஷ்டேக்களின் கீழ் ட்விட்டரில் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்வீடன் நாட்டு சிறுமியின் ஆவேசம்
இந்நிலையில், இந்தியாவில் மோடிக்கு எதிராக டிவிட்டரில் ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆன நிலையில், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா துன்பெர்க் நீட், ஜேஇஇ (JEE, NEET) தேர்வுகளை ஒத்திவைக்க வலியுறுத்தி டிவிட்டரில் கருத்து பகிர்ந்துள்ளார்.
கிரேட்டா துன்பெர்க் பதிவு
இதுகுறித்து கிரேட்டா துன்பெர்க் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் காலத்திலும், லட்சக் கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்திய மாணவர்களைத் தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது நியாயமற்ற ஒன்றாகும். ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க விடுக்கும் அழைப்புக்கு நான் துணை நிற்கிறேன்" என கூறியுள்ளார்.
இந்திய மாணவர்கள் உற்சாகம்
மத்திய அரசின் இந்த கடுமையான நடவடிக்கைக்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு ஆதரவாக கிரேட்டா துன்பெர்க் வெளியிட்டுள்ள பதிவு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பானர்ஜி
காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கும்படி மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் நேரத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும் என அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சோனு சூட்
நடிகர் சோனு சூட் தனது டிவிட்டர் பதிவின் வாயிலாக மத்திய அரசிற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், கொரோனா நோய்த் தொற்றினைக் கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது என மத்திய அரசை சாடியுள்ளார்.
என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?
முன்னதாக கடந்த ஆண்டு ஐநா. சபையின் கூட்டத்தில் மோடி, டிரம்ப் உள்ளிட்ட அனைத்து நாட்டு தலைவர்களின் முன்னிலையில் "என்ன நினைச்சிட்டு இருக்கீங்க எல்லாரும்? உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தைரியம்? யாருக்காவது எங்க மீது அக்கறை இருக்கா" கால நிலை மாற்றத்திற்கு எதிராக ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய சிறுமி கிரேட்டா தன்பெர்க் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.