இஸ்ரோ சார்பில் நடைபெறவுள்ள விண்வெளி தொடர்பான வினாடி- வினா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் நிகழ்வை நேரலையில் காணலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்ற வானொலியில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் போது, மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டியினை அறிவித்தார். அப்போது, ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
வரும் செப்டம்பர் மாதம், சந்திரயான்-2, நிலவில் தரை இறங்குவதை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காணும் வாய்ப்பை அவர்கள் பெறுவார்கள். அவர்களது வாழ்க்கையில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என்றார்.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரோ இது தொடர்பான அறிவிப்பை அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், விண்வெளி தொடர்பான வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுபவர்கள், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் நிகழ்வை நேரலையில் காணலாம் என அறிவித்துள்ளது.
வினாடி வினா தொடர்பான தகவல்களை http://quiz.mygov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.