இஸ்ரோ சார்பில் நடைபெறவுள்ள விண்வெளி தொடர்பான வினாடி- வினா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் நிகழ்வை நேரலையில் காணலாம் என இஸ்ரோ அறிவித்திருந்தது.
இந்நிலையில், செப்டம்பர் 7-ஆம் தேதியன்று நிலவில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்குவதைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவதற்கான விநாடி- வினா போட்டியில் பங்கேற்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சந்திராயன்- 2
இந்தியாவின் சார்பில் கடந்த ஜூலை 22-ஆம் தேதியன்று விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை, புவி சுற்று வட்டப் பாதையில் சுற்றி வந்த நிலையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.
நிலவின் சுற்றுவட்டாரப் பாதை
தொடர்ந்து, நிலவின் சுற்றுப் பாதைக்குள் விண்கலம் கடந்த 20-ஆம் தேதி வெற்றிகரமாக நுழைக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுப்பாதையைக் குறைக்கும் நடவடிக்கையையும் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டதன் மூலம் விண்கலம் தற்போது நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 118 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 4,412 கி.மீ. தொலைவிலான நீள்வட்டப் பாதையில் நிலவைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.
விண்கலம்
தொடர்ந்து செப்டம்பர் 1-ஆம் தேதி வரை மேலும் 2 முறை சுற்று வட்டப் பாதை அளவு குறைக்கப்பட்டு இறுதியாக நிலவின் பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் சுற்றிவரும் வகையில் நிறுத்தப்படும்.
லேண்டர் தரையிறக்கம்
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 2-ஆம் தேதியன்று ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் அமைப்பு பிரித்துவிடப்படும். அவ்வாறு பிரித்துவிடப்பட்ட பின்னர் மேலும் 2 முறை சுற்றுப்பாதை குறைக்கப்பட்டு, செப்டம்பர் 7-ஆம் தேதியன்று அதிகாலை நிலவின் பரப்பில் மெதுவாக லேண்டர் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விநாடி- வினா போட்டி
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனை நிகழ்வை பெங்களூருவில் உள்ள தரைக் காட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட உள்ளார். பிரதமருடன் சேர்ந்து இந்த நிகழ்வை பொதுமக்களும் காண வாய்ப்பு அளிக்கும் வகையில் விநாடி- வினா போட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பங்கேற்பதற்காகக் கடந்த 20-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
நேரலையில் காணலாம்
அதன்படி, வருகிற சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) வரை https://quiz.mygov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இந்த விநாடி- வினா போட்டியில் பங்கேற்கலாம். இந்தப் போட்டியில் 20 கேள்விகளுக்கு 5 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். இதில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்படுவோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் நிகழ்வை நேரலையில் காணலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.