சென்னை, மார்ச் 4: பல்கலைக் கழக மாணவர்கள் உருவாக்கிய 9 செயற்கை கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோவின் மாணவர் செயற்கைகோள் திட்டத்தின் இயக்குநரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை கூறியது:
மாணவர்கள் படிக்கும் போதே அனைத்து துறைகளிலும் முழுமையான திறன் பெற்றவர்களாக வெளி வர வேண்டும். இது போன்ற சிறந்த மாணவர்களை இஸ்ரோ விண்வெளி ஆராய்சிக்கு பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம். மாணவர்கள் செயற்கை கோள் திட்டத்தின் மூலம் தமிழகம் மட்டும் அல்லாமல் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், உலகளாவிய நாடுகளில் உள்ள மாணவர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி தர முடியும்.
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களின் செயற்கை கோள் திட்ட வரைவுகளை அளித்தால் அதை விண்ணில் ஏவ உதவி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.
மேலும் சர்வதேச அளவிலான கருத்தரங்கில் மாணவர்கள் பங்கேற்று பேசுவதற்கான வாய்ப்பையும் அளிக்கிறோம். இதுவரை அண்ணா பல்கலைக் கழகம், கரக்பூர் ஐஐடி ஆகியவை தலா ஒரு செயற்கைகோளும், ஆந்திரா, கர்நாடகா பல்கலைக் கழகங்கள் இணைந்து ஒரு செயற்கை கோளையும் தயாரித்துள்ளன. இவற்றை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. தற்போது பல்வேறு பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் இணைந்து 8 முதல் 9 செயற்கை கோள்களை ஏவுவதற்கான வரைவுத் திட்டம் தயாரித்துள்ளோம்.
இந்த வரைவுத் திட்டம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் 9 செயற்கை கோளும் விண்ணில் ஏவப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications












