கோவை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவத்தில் "மூன்றாவது மொழியாக இந்தி படிக்க விரும்புகிறீர்களா?" என கேள்வி கேட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் தொடரும் என அரசு அறிவித்துள்ள நிலையில், பள்ளி சேர்க்கையில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனால், இந்தி மொழி அரசு பள்ளிகளில் கற்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
புதிய கல்விக் கொள்கை
மத்திய அரசின் சார்பில் கடந்த மாதம் புதிய தேசியக் கல்விக் கொள்கை எவ்வித அறிவிப்பும், கருத்துக் கேட்பும் இன்றி திடீரென அமல்படுத்தப்பட்டது. இதனால், குலக்கல்வி, சமஸ்கிருதம், இந்தி போன்றவற்றை மத்திய அரசு திணிக்க முயல்வதாக நாடு முழுவதும் கண்டன் குரல்கள் எழுந்தன.
மத்திய அரசு மறுப்பு
புதிய தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், அதில் இந்தி கட்டாயம் இல்லை என்றும் மாறாக ஏதேனும் ஒரு இந்திய மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அதிரடி காட்டிய தமிழக அரசு
இதனிடையே, தமிழக அரசின் சார்பிலும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான அறிவிப்புகள் வெளியாகின. அதில், தமிழகத்தில் வழக்கத்தில் உள்ள இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் இந்தி திணிப்பு தமிழகத்தில் நடைபெறாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
விண்ணப்பப் படிவத்தில் இந்தி
இந்நிலையில், கோவை மாநகராட்சி அரசு பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில், படிவங்களில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என்று கேள்வி குறிப்பிடப்பட்டிருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி படிக்க விருப்பமா?
அதற்கு அடுத்தபடியாக முதல் மொழியின் கீழ் மாணவர் எடுத்துக் கொள்ள விரும்பும் உத்தேச மொழிகள் என்ற கேள்வி உள்ளது. அதில், மூன்றாவது மொழி (இந்தி) எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா அல்லது கைத் தொழில் ஒன்றை அதிகப்படியாகக் கற்றுக்கொள்ள விரும்புகிறார்களா? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
கேள்விக் குறியான இரு மொழிக்கொள்கை
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்றும் மும்மொழிக் கொள்கையைத் தமிழகம் ஏற்காது என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்வி பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மாநகராட்சி ஆணையர் மறுப்பு
இந்நிலையில், 'இந்த விண்ணப்பப் படிவம் போலியானது என்று கோவை மாநகராட்சி ஆணையர் ஷரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். மேலும், இதனை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் வழங்கி இருக்க வேண்டும் என்றால் இங்குள்ள 84 பள்ளிகளிலும் வழங்கியிருக்க வேண்டும். இது போன்ற விண்ணப்பங்கள் மாநகராட்சி தரப்பில் எதுவும் வழங்கப்பட இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.