இந்தியாவில் ஒருவர் பிறப்பது முதல் இறப்பது வரை ஆதார் எண் இன்றி எதுவுமே செயல்படாதவாறு கட்டமைத்து வருகிறது மத்திய அரசு. பிறப்பு, இறப்பு சான்றிதழ், வீட்டு சமையல் எரிவாயு, சிம் கார்டு என எங்கு திரும்பினாலும், எதை வாங்க வேண்டும் என்றாலும் இங்கே ஆதார் கட்டாயம். அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்குக் கூட தனியாக ஆதார் அட்டையை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் வியப்படையச் செய்துள்ளது.
மாணவர்களுக்கு அதார்
சமீப காலத்தில் தொடக்கநிலைக் கல்விக் கூடங்களில் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும் என்றால் ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால், பல சிறு குழந்தைகள் உணவின்றி தவித்தது நாம் அறிந்ததே. இந்நிலையில், அடுத்தகட்டமான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் வழங்க வேண்டும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு ஆதார் நிறுவனம் (யுஐடிஏஐ) சில கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
தமிழக அரசு
மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் பெரும் ஆதரவு அளித்து வரவேற்கும் தமிழக அரசின் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக பள்ளி மாணவர்களின் முழு விபரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும் எனவும், இதில் மாணவர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை, முகவரி, இரத்த வகை உள்ளிட்டவை இணைக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
200 கோடி ரூபாய் செலவு
மாணவர்களுக்கு ஆதார் வழங்குவதற்கு என தாலுகா வாரியாக சுமார் 200 கோடி ரூபாய் செலவில் ஆதார் இயந்திரம் அமைக்க நடுவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பள்ளிகளே தாமாக முன்வந்து தபால் நிலையங்கள், மாநிலக் கல்வித் துறை ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்தலாம். அவற்றின் மூலம் ஆதார் அட்டையை பெறுவது, தவறுகளை நீக்கி சரியான ஆதார் அட்டையை வழங்குவது உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்.
சேர்க்கைக்கு கட்டாயம் ?
ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளியில் சேர முடியும் என்ற கட்டாயம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஆதாரைக் காரணம் காட்டி மாணவர்களை பள்ளியில் சேர்க்காமல் இருப்பது குற்றம் எனவும், அதற்கு மாற்றாக வேறு ஏதேனும் அடையாள அட்டையைக் கொண்டு மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க வேண்டும் என்றும் ஆதார் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.