சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள போலீஸ் எஸ்.ஐ. பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் போலீஸ் துறையில் காலியாக இருக்கும் 1,078 போலீஸ் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு தேர்வை அறிவித்தது. இதில் 20 சதவீதம் பணியிடங்களில் அத்துறையைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மற்ற இடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இந்தத் தேர்வின் முதல் கட்டமாக எழுத்துத் தேர்வு, பொது ஒதுக்கீட்டுதாரர்களுக்கு கடந்த மே மாதம் 23-ம் தேதி மாநிலம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதேபோல காவல்துறை ஒதுக்கீட்டுதாரர்களுக்கு, எழுத்துத் தேர்வு அதே மாதம் 24-ம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம் பேருக்கு உடல் தகுதித் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல்திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 11 இடங்களில் கடந்த மாதம் 3,4,5-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 2,100 பேருக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இவர்களுக்கு இன்டர்வியூ சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இதில் உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 50 பேர் பங்கேற்றனர். இவர்களிடம் சீருடை வாரிய அதிகாரிகள் நேர்முகத் தேர்வை நடத்தினர்.
இவ்வாறு தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணியாணை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.