சென்னை: குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நேர்காணல் வரும் 15 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், நிதித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர், சட்டத் துறையில் உதவிப் பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்கள், கைத்தறியில் ஆய்வாளர்கள், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 19 பதவிகளில், ஆயிரத்து 130 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடந்தது. அதில் 11 ஆயிரத்து 497 தேர்வர்கள் பங்கேற்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தில் அளித்துள்ள தகுதிகள், விவரங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை அறியும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 5 ஆயிரத்து 635 பேர் அழைக்கப்பட்டனர். விண்ணப்பதாரர்களிலிருந்து நேர்காணல் தேர்வுக்கு தாற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 266 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.
நேர்காணல் தேர்வு வரும் 15 ஆம் தேதி முதல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறாமல் தேர்வில் கலந்துகொள்ளவேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.