திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் காலிப் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திருச்சி என்ஐடியில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான அறிவிப்பாணையை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் பொது மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (என்ஐடி) உதவிப் பேராசிரியர்கள் உள்பட 134 பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பாணை கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இதில், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில், இட ஒதுக்கீடு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை.
எனவே, திருச்சி என்ஐடி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், இடஒதுக்கீடு அடிப்படையில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? என்பது குறித்த விவரங்களுடன் புதிய அறிவிப்பாணை வெளியிட உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திருச்சி என்ஐடி கல்லூரியின் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் மனுவுக்கு, திருச்சி என்ஐடி தொழில்நுட்ப கல்லூரியின் இயக்குநர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Click it and Unblock the Notifications












