இந்திய ராணுவ வரலாற்றில் முதல் முறையாக முப்படைகளின் தலைமை தளபதியாக கிழ்ந்தவர் பிபின் ராவத். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இப்பதவியில் நாட்டின் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி உள்ளிட்டு 13 பேர் உயிரிழந்தனர்.
யார் இந்த பிபின் ராவத்?
இந்திய இராணுவத்தின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் நியமிக்கப்பட்ட பெருமைக்கு உரியவர் ஜெனரல் பிபின் ராவத். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இப்பதவியில் வகித்து வந்தார். அதற்கு முன் இந்திய ராணுவத் தளபதியாக இவர் இருந்தார்.
தந்தை பணியாற்றிய அதே பிரிவு
ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் செயல்பட்டு வரும் செயிண்ட் எட்வர்ட் பள்ளிப் படிப்பை முடித்து பின் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் மேற்படிப்பை மேற்கொண்டார். தொடர்ந்து, 1978-ஆம் ஆண்டு டிசம்பரில் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமியில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். அவருடைய தந்தையும் அதே பிரிவில் இராணுவ பயணத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
கார்கில் யுத்த காலம் முதல்
கடந்த 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரின் போது முப்படைகளுக்குமான தலைமை தளபதி குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, தரைப் படை, விமானப் படை, கடற்படை உள்ளிட்ட முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பாக நீண்டகாலமாக மத்திய அரசு ஆலோசித்து வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அதனை செயல்படுத்த முடியாமல் போனது.
பெருமைக்குரிய பிபின் ராவத்
இந்திய ராணுவத்தில் முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் பதவி வகித்து வருகின்றனர். ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளுக்கான தலைமை தளபதிகளாக இருந்தனர். இவை அனைத்திற்கும் சேர்த்து இந்திய ராணுவத்தில் முதன்முதலாக முப்படைகளின் தலைமை பதவியில் நியமிக்கப்பட்ட பெருமைக்கு உட்பட்டவர் பிபின் ராவத்.
பிரதமர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2001-ம் ஆண்டு அமைச்சரவை குழு முப்படை தலைமை தளபதி குறித்து அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்தது. அதனைத் தொடர்ந்து நரேஷ் சந்திரா கமிட்டி, லெப்.ஜெனரல் ஷெகாத்கர் கமிட்டி ஆகியவையும் முப்படைகளுக்குமான தலைமை தளபதி குறித்து பரிந்துரைகள் வழங்கியதை அடுத்து 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மோடி, முப்படைகளுக்குமான தலைமை தளபதி நியமிக்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஓய்வு பெற்ற பிபின் ராவத்
2019-ம் ஆண்டு டிசம்பர் 24 அன்று முப்படை தலைமை தளபதி பதவி அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டியால் உருவாக்கப்பட்டது. அப்போது ராணுவ தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் சூழ்நிலையில் இருந்த பிபின் ராவத் நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராணுவத்தினரை கட்டுப்படுத்த முடியாது
முப்படைகளுக்கான தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டிருந்தாலும் ராணுவத்தினருக்கு அவரால் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் இல்லை. மாறாக முப்படை தளபதிகளிடம் அரசின் முடிவுகளை தெரிவித்து அவற்றை செயல்படுத்துகிற ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். மேலும், ஆயுத கொள்முதல், முப்படைகளின் கூட்டு நடவடிக்கை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொண்டு வந்தார்.
நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து
இந்த நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், தனது மனைவி மற்றும் அதிகாரிகளுடன் தமிழகத்தின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்துக்கு டெல்லியில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டரில் பயணித்தார். குன்னூர் அருகே டிசசம்பர் 8 அன்று முற்பகல் 11.30 மணிக்கு பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












