சென்னை: பிள்ளைகள் வெளிநாட்டில் சென்று பட்டப்படிப்பு படிக்க இந்தியர்கள் அதிகம் செலவழிப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
எச்எஸ்பிசி சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. இந்தியர்கள் வெளிநாட்டில் பிள்ளைகள் சென்று பட்டப்படிப்பு படிப்பதற்காக அதிக அளவில் இந்தியாவிலிருந்து பெற்றோர் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்களாம். இதற்காக அவர்கள் அதிகம் செலவழிப்பதாகத் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளுக்காக ஏராளமாக செலவழிப்பதால் அவர்கள் பொருளாதாரச் சிக்கல்களிலும் சிக்குவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை 16 நாடுகளில் உள்ள 5,550 பெற்றோர்களிடம் எச்எஸ்பிசி நடத்தி முடித்துள்ளது. வெளிநாடுகளில் படித்து முடிப்பதற்காக குழந்தைகளை அனுப்பும் பெற்றோர் திட்டமிட்ட செலவு செய்ய முடியாமல் அதற்கு மேலும் செலவு செய்யும் நிலை ஏற்படுகிறதாம். இதனால் பலர் கடனாளியாகவும் ஆகின்றனராம்.
குறிப்பாக இந்திய பெற்றோரிடம் இந்தப் பிரச்னை உள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதுதொடர்பாக நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி பிள்ளைகளை படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பும்போது அவர்கள் திட்டமிட்டபடி செலவு செய்ய முடிகிறது. தங்கள் குழந்தைகளின் கனவுகளை அவர்கள் நனவாக்குகிறார்கள். மேலும் அவர்கள் கடனிலிருந்தும் தப்பிக்கின்றனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இத்தகவலை எச்எஸ்பிசி இந்தியாவின் தலைவர் (ரீடெயில் பேங்கிங் அண்ட் வெல்த் மேனெஜ்மெண்ட்) எஸ். ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆய்வில் பட்டப் படிப்புகளுக்கு சிறந்த இடமாக அமெரிக்கா இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும் இங்குதான் படிப்பதற்கு அதிகம் செலவாவதாகவும் தெரியவந்துள்ளது.
ஒரு பட்டப்படிப்பை இந்தியாவில் படிப்பற்கு ரூ.1 லட்சம் செலவாகிறது என்றால் அதை விட 12.6 மடங்கு அமெரிக்காவில் செலவாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.