சென்னை: நாட்டில் மேலும் 64 சட்டக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியும், அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் டி.வி. சதானந்தகௌடா அறிவித்துள்ளார்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த சட்டக் கல்லூரிகள் 2015-16- கல்வியாண்டில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் இணைப்பைப் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்புக் கல்வியாண்டிலேயே இந்த சட்டக் கல்லூரிகளுக்கு சேர்க்கையும் தொடங்கப்படும் என்று அமைச்சர் டி.வி. சதானந்தகௌடா தில்லியில் நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார்.
நாட்டில் சட்டக் கல்வி முறையை வலுப்படுத்துவதற்காக இந்த அனுமதியை மத்திய சட்டத்துறை அமைச்சகமும், பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவும்(பிசிஐ) வழங்கியுள்ளதாக சதானந்த கௌடா தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக சட்டக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு 116 விண்ணப்பங்கள் வந்ததாகவும், அதில் தற்போது 64 புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் சதானந்த கௌடா தெரிவித்துள்ளார்.